திங்கள், 18 ஜனவரி, 2010

எலி...



காலைத் தூக்கத்தை கலைத்தது
காதைக் கிழித்த பெரிய ஒலி ...
'உன் அறையில் புகுந்துவிட்டது
ஒரு பெருச்சாளியை ஒத்த எலி'

போர்வைக்குள் சுருண்டிருந்த நான்
சுருட்டிக் கொண்டு எழுவதற்குள்
மூலையில் வைத்திருந்த பெட்டியின் பின்
பதுங்கிவிட்டது அந்த எலி.

ஒரு கையில் விளக்குமாறு
ஒரு கையில் பிளாஸ்டிக் துடப்பம்
ஒரு கையில் தாத்தாத் தடி
ஒரு கையில் சுருட்டிய நாளிதழ்
நால்வர் கூடித் திட்டமிட்டனர்.

"நீ வாயிலில் நில்"
"நீ கூடத்தில்"
"நீ சமயலறைக் கதவருகில்"
"நான் பெட்டியை நசுக்குகிறேன்
முடிந்தால் அந்த பெட்டியையே எலிக்கு
சவப்பெட்டி ஆக்குகிறேன்..."

எச்சரிக்கை ஒலியெழுப்பி பெட்டி
சுவருடன் நசுக்கப்பட்டது...
நசுக்கவும் பெட்டியின் இடைவெளியில்
நாசுக்காக ஓடி விட்ட எலி, கூடத்தில்
கூடியிருந்த கூட்டத்தைக் கடந்து
தொலைக்காட்சிப் பெட்டியின் அடியிலே
பதுங்கியது...

கூடினர் அனைவரும்
தோல்வி அப்பிய முகத்துடன்.
புதிய திட்டம் தீட்டினர்
"விளக்குமாறோ, கைத்தடியோ
நிலத்தோடு பிடிக்கவேண்டும்..."

மறுமுறை எச்சரிக்கை ஒலியெழுப்பி
தாத்தாத் தடியினால் எலி வயிற்றில்
குத்தித்தள்ள.. தத்தளித்து
குதித்த எலி என் பக்கமாக ஒட...

விளக்குமாறு அதனை என் தந்தை
பக்கமாகத்தள்ள.. 'எகனாமிக்ஸ் டைம்ஸ்'
தாண்டி எலி ஒருபக்கம் ஒடி...
ஜன்னலுக்கு போர்திய துணிபிடித்து ஏறி
மறுபக்கம் இறங்கி ஜன்னலில் அமர

விழுந்தது துடப்பம்...எலி மேல் அல்ல..
என் மேல்... "அடி டா" என்று...
விழுந்தது என் கையில் இருந்த
விளக்குமாறு எலிமேல்...

மூன்றாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டேன்...
வெகு நேரம் அந்த எலி தென்படவேயில்லை..
கீழே விழுந்து செத்திருக்குமோ...அல்லது
உயிருடன் தான் துடித்துக்கொண்டிருக்குமோ ...

கேள்வி என்னுள் எழுந்தது...

உயிருக்கு அஞ்சி ஓடிய அந்த எலி
தன்னைக் காத்துக்கொள்ள ஓடியதா...
இல்லை தன் வயிற்றுக் குட்டிகள் காக்க ஓடியதா ??

8 கருத்துகள்:

பின்னோக்கி சொன்னது…

எலியைத் தேடி அடித்த மாதிரி இருந்தது. கடைசி வரி யோசிக்க வைத்தது. அருமை.

சந்தனமுல்லை சொன்னது…

அருமையான narration அகஆழ்!! கடைசியில்
எலிக்கு வலித்ததோ இல்லையோ..எனக்கு வலித்தது..:-)


வித்தியாசமாக இருக்கிறது தங்களின் ஹெட்டர் வரிகள் - அதில் உண்மையும் இருக்கிறது! தொடர்ந்து எழுதுங்கள்!!

அகஆழ் சொன்னது…

நன்றி பின்னோக்கி.

நன்றி சந்தனமுல்லை.
“தொடர்ந்து எழுதுங்கள்” என்று ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

எலி பாக்க அழகா இருக்கும் ஆனா நம்ம வீட்டுக்குள்ன்னா இப்படித்தான் எல்லாருமா பாஞ்சு பதறி .. ஆகா சொன்னவிதம் அப்படியே நடக்கும் எல்லார் வீட்டிலும்.. ஆனா அது மட்டும் சிக்காம ஆட்டம் போடும்..அடிச்சதும் பாவமாத்தான் இருக்கும்..ஆனா வேற வழியில்லையே... நாமளும் நம்ம பிள்ளைங்க உடமை ந்னு காரணத்துக்காகத்தானே அதை துரத்தறோம்..:)

ஆழ்ந்து அறிந்து தெரியப்படுத்துங்கள் வாழ்த்துக்கள்..

அமுதா சொன்னது…

ஓர் எலியை அடித்ததைப் பற்றி எழுதியுள்ள கோணம் அருமை.

அகஆழ் சொன்னது…

நன்றி முத்துலெட்சுமி...
“நாமளும் நம்ம பிள்ளைங்க உடமை ந்னு காரணத்துக்காகத்தானே அதை துரத்தறோம்”..
புதிய கோணத்தில் சிந்திக்கவைக்கிறது...

நன்றி அமுதா..

கிறிஸ்றி சாமுவேல் சொன்னது…

கவிதை திறனும் உன்னுள் உள்ளதா நன்பா, அறநெறிகளுடன்!

அகஆழ் சொன்னது…

நன்றி கிறிஸ்தி!

கருத்துரையிடுக