ஞாயிறு, 31 மே, 2026

நூலும் பட்டமும்

 


மயான பூமி
அடர்ந்த மரங்கள்
மேல் கிளையில்
நூல் அறுந்த 'பட்டம்'


சனி, 15 பிப்ரவரி, 2025

பிரிதலும் சேர்தலும்

 



சொந்தங்கள் ஒன்று சேர்ந்ததும்

பிரிந்தும்​,

​அவர்கள் பிரிந்து சென்றதும்

ஒன்று சேர்ந்துமாய்​

நிற்கின்றன,

​திருமண மண்டப

நாற்காலிகள் !

புதன், 5 பிப்ரவரி, 2025

சருகின் இறுதி ஆசை

 





காற்றே...

என்னை சற்று முன்னமே உதிர்த்து விட்டாய்...

பரவாயில்லை.

எனினும் சிறிது நேரம் வீசுவதை 

நிறுத்திக்கொள்...

என்னை இத்தனை நாள் உயரப்பிடித்த 

மரத்தின் காலடியை 

முத்தமிட்டு விடுகிறேன்...

பிறகு மீண்டும்  வீசிக்கொள். 


வெள்ளி, 29 நவம்பர், 2024

தேங்க்ஸ் கிவ்விங்




நான் சைவமாக மாறியதற்கு 

நன்றி நவின்றது...

வான் கோழி

திங்கள், 4 மார்ச், 2024

சும்மா இரு

 



கடவுள் இருக்கும் இடத்திற்கு 

பூ 

எடுத்துச் சென்றான் 

பக்தன்... 

பூ 

இருக்கும் இடத்திலேயே 

கடவுள் இருப்பதை அறிந்த 

ஞானி... 

சும்மா இருந்தான் 


அமரர் ஊர்தியும் சர வெடியும்




மார்ச் மாதம்...

போக்குவரத்து நெரிசல்,    

மார்ச்சுவரி செல்லும் 

அமரர் ஊர்தி...

சர வெடிப் பட்டாசு, 

சத்தம் அடங்கியதும் 

புகையுடன் ஒரு வாசம், 

ஏனோ எனக்கு மட்டும் 

அது மகிழ்ச்சியாய் 

தீபாவளியை 

நினைவு படுத்தியதில் 

ஒரு கணம் இன்பம்...

மறு கணம் நெருடல்...

"சரி சரி 

அந்த ஆன்மா சாந்தி அடையட்டும்",  என்று 

அவசரமாய் நினைத்து விட்டு 

நகர்ந்தேன்.


திங்கள், 18 டிசம்பர், 2023

பூ வாசம்

 


காசு குடுக்காமலே

பூக்கடையில் கிடைக்கிறது

பூ வாசம்!



வியாழன், 7 டிசம்பர், 2023

பிரதிபலிப்பு

 



மழை நீர் தேக்கம் ...

விடியலில் புதியதாய் 

பிரதிபலித்தது அதிலே  

உதய சூரியன்



திங்கள், 11 ஜூலை, 2022

சங்கமம்

 



    

இருபத்தைந்தாண்டு கால நினைவை

வெறும் இருபத்தைந்து மணி நேரத்திலே

அனுபவமாய் அள்ளி வழங்கிய அதிசயம்

இந்த சங்கமம்!

 

பலரை இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தே

சந்தித்தாலும்,

ஏதோ முந்தினம் பார்த்தது போல்

மட்டுமே இல்லாமல்,

தினம் தினம் பார்த்திருந்தது

போல் ஒரு உள் உணர்வை தந்தது

இந்த சங்கமம்!

 

வெளியுலக வாழ்க்கைக்கென

எப்பொழுதுமே போர்த்தியிருந்த

கனமான மனப் போர்வையை

தகர்த்தெரிந்து இயல்பாய்

இருந்த தருணங்களே

இந்த சங்கமம்!

 

'டேய் மாப்பிள...

ரொம்ப குண்டாயிட்ட, ஒல்லி ஆயிட்ட, அப்படியே இருக்க...'

என்ற பரிமாற்றத்திலும் கூட உடலை கடந்து

உள்ளங்கள் நலம் விசாரித்துக்கொண்டதே

இந்த சங்கமம்!

 

நட்புகள் அளித்த புத்துணர்ச்சியில்

அழகு சேர்க்க

பசுமையான புல் வெளி,

கண்களுக்கு இதமான வயல் வெளி,

வரப்பு வழி நிதான பயணம்,

பம்பு செட் குளியல்,

ஆலம் விழுது ஊஞ்சல்,

மண்ணை ஊதி உண்ட நாவல் பழம்,

சலனமில்லா ஏரி

சத்தமில்லா காற்று!

 

இரவு முழுவதும் தூங்காமல் கூட

மறுநாள் புத்துணர்வோடு இருந்த

அதிசயம்!

 

நினைவுகள் தான் பெரிய பரிசு

நினைவுகளை நினைவு படுத்தும் விதமாக

அனைவரது வரவேற்பு அறையை இந்நேரம்

அலங்கரித்திருக்கும்

பளிங்கு படிக கோபுரமும் ,

பித்தளை யானைகளும்...

 

கண்ணாடி முன் நின்று முகம் பார்த்தால்

நான் மட்டுமே தெரிகிறேன்...

அந்த குளம்பி குவளையில் பதித்த என்

முகத்தை பார்க்கும் பொழுது மட்டும்

நம் அனைவருமே தெரிகிறோமே!

 

நட்டு வைத்த விதைக்கு

நீர் ஊற்றும் பொழுதும்

நட்பே தெரிகிறது!

 

மீண்டும் சந்திப்போம் என்று

விடை பெற்றுக்கொண்டு

இரண்டு மணி நேரம் கடந்த பின்பும்

அந்த இடத்திலேயே

சுற்றிக்கொண்டிருந்தோம்!

 

சங்கமித்தவர்கள் பிரிந்து அவரவர்

வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாலும்

சங்கமத்திலிருந்து ஒருவருக்கொருவர்

பகிர்ந்ததை எடுத்துக்கொண்டே செல்கிறோம்!

அதுவே நம்மை அடுத்த சங்கமம் வரை

உற்சாகமாய் பயணிக்க வைக்கும்!

 

நட்பில் நன்றி நவில்தல் இல்லை

நில்லாமல் ஓடி

பல தடைகளை தாண்டி கடலில்

சங்கமிக்கும் ஆறுகளாய்

அயராது உழைத்து

அனைவரையும் அழைத்து

சங்கமிக்கவைத்த அனைவருக்கும்

உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்!

 


ஞாயிறு, 20 ஜூன், 2021

தந்தையர் தினம்

 


மறைந்த என் தந்தையின் 

நினைவாகவே இருந்தேன் ...

என் குழந்தைகள் வந்து 

'அப்பா' என்றென்னை 

அழைக்கும் வரை.


புதன், 3 ஜூன், 2020

குடியே பெயர்ந்த குடிபெயர்ந்தவன்...






குடிபெயர்ந்தவன் 
குடியே பெயர்ந்ததென்ன ...

உழுத நிலம் போல் 
பிளந்த கால் கடுக்க 
அழுத கண்ணீரும் 
பகலவன் உரிந்தெடுக்க 
தொழுத தெய்வமும் 
கை விட்டதுவோ ?! 

அருந்தவும் நீரில்லை 
வருந்தவும் ஆளில்லை... 

நடக்கக்கூடாதது 
நாட்டில் நடக்க,
வறண்ட நாவோடு 
சுருண்ட வயிறோடு 
இருண்ட கண்ணோடு 
திரண்ட மக்கள்,
நடக்க முடியாமல்
நடைபிணமாய் நடக்க...

ஐந்தறிவு புள்ளினம் 
சுதந்திரமாய் திரிய 
ஆறறிவு ஜீவன்
ரணத்தோடு 
மரணத்தை 
எதிர்கொண்டு வெறும் 
புள்ளி விவரமாய் மடிய...

மூட்டை சுமத்தவன் 
மூட்டைக்குள் சவமாய்...

இரயில் ஏறி மரணம் 
ஏறிய இரயிலில் மரணம் 
விபத்தில் மரணம் 
பசியில் மரணம்  
பிணியில் மரணம் 
பீதியில் மரணம்
நாதி அற்றவனாய் நடு 
வீதியில் மரணம்...

இங்கு 
மதிப்பிழந்தது வெறும் 
பணம் மட்டுமல்ல 
பிணமும் கூட... 

ஏழ்மை அழியாமல் 
ஏழையே அழிவதா ?!

காரணம்,
கிருமியா... 
பேராசை பிடித்த 
கருமியா ?!

இறந்த மனிதன் 
கேட்கிறான் 
இருக்கிறதா மனிதம் 
என்று... 

பேச்சு சுதந்திரம் இழந்து 
மூச்சு சுகந்திரமும் இழந்து 
முக கவசம் அணிந்து 
வாயடைத்த ஊமையாய் 
வேடிக்கை பார்க்கிறோம்

விடை 
காலனின் கையிலா 
காலத்தின் கையிலா 

ஞாயிறு, 22 மார்ச், 2020

ஜனதா curfew




ஜனதா curfew 
பால்கனிவரை சென்றேன் 
பறவைகள் 
பறந்துகொண்டிருந்தன !

சனி, 9 மார்ச், 2019

மகளிர் தினம்


Image result for woman freedom painting


பெண்!
தினம் எடுத்து
கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல,
தினம் தினம்
கொண்டாடப்பட வேண்டியவள்!


சனி, 27 ஜனவரி, 2018

என்னவளே, அடி என்னவளே!



காமத்திற்கும் காதலிற்கும் 
அப்பால் உள்ள 
இயல்பான ஆனந்தத்தை 
அனுபவிக்கும் காலம் ...

தோலுக்கென காத்திருந்த 
நாட்கள் கடந்து 
உன்
தோளுக்கென 
காத்திருக்கும் நாட்கள்! 

எந்நேரமும் 
சாய்ந்து கொள்ள
உன் தோள்  
இருக்கின்றதென்ற  
உணர்வே ஆனந்தம்!

அன்பாய்,
அனுசரணையாய்,
இயல்பாய் 
நான் நானாகவே 
வாழும் பேறு 
உன்னோடு பெற்றேன்! 

எனக்கென  
நீ இருக்கிறாய் 
என்று நிம்மதியாய், 
சாந்தமாய் 
இறுதி மூச்சு விட்டனர் 
என் தாய் தந்தை... 

நீ 
தாயாக 
குழந்தைகளோடு 
எனக்குமாய் 
இருந்து வருகிறாய்!

மேடு பள்ளம் நிறைந்தது 
தான் வாழ்க்கை 
என்ற புரிதலே 
ஆனந்தம்! 

ஊடலும் 
வாழ்க்கையின் 
ஒரு அங்கம்  
என்ற புரிதலே 
ஆனந்தம்!

சண்டையிட்ட பின் 
சரி செய்ய முயற்சி ஏதும் 
எடுக்காமல் தானாகவே 
சமாதானமாகும் 
உன்னுடனான 
உறவும் ஒரு வரமே!

எனக்கு நீ 
உனக்கு நான் 
என்று 
முற்றிலுமான சார்பு 
வாழ்க்கையாய் இல்லாமலும்...

எனக்கு நான் 
உனக்கு நீ
என்று 
முற்றிலுமான 
தனித்துவம் நிறைந்த 
வாழ்க்கையாய் இல்லாமலும்...

இரண்டிற்கும் இடையே 
ஒரு உன்னத 
உறவு நிலையில் 
சுதந்திரச்சார்பை  
கண்டு களிக்கிறோம்!

திருமணங்கள் 
நிச்சயிக்கப்படும் இடமாய் 
மட்டும் இல்லாமல் 
உன்னோடு வாழும் 
வாழ்க்கையும் 
விருப்பு வெறுப்பிற்கு 
அப்பால் நிற்பதால் 
இதுவும் 
சொர்கமே!



P.C Ujesha Sivaramakrishnan


சனி, 2 டிசம்பர், 2017

அன்பே அன்னையாய் !


நீங்கா நினைவிலிருந்து நீங்கி, 
நீங்கியும் நீங்காமலும் நின்று,
நீங்கியே விட்டது நினைவிலிருந்து... 

நினைவலைகளை தட்டியெழுப்பியதும்- 
என்றோ உன் கரம் பிடித்து நடந்ததும், 
உன் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டதும், 
உன் வெப்பம் என் வலியை கரைத்ததும்,
உன் பாசம் முழுவதுமாய் என்னை அரவணைத்ததும், 
உன் கைகள் என் தலை கோதி அமைதிப்படுத்தியதும், 
உணவோடு சேர்ந்து ஊக்கத்தையும் ஊட்டியதும்,
என்னை சிறு சிறு அடியெடுக்கச்செய்து 
சிறகடித்து பறக்க விட்டதும்
நினைவிலிருந்து எட்டிப்பார்க்கின்றன !

உடலாய் உன்னை நினைத்தால் 
இன்று நீ இல்லை...
உணர்வாய் உன்னை நினைத்தால் 
என்றுமே நீ இல்லாமல் இல்லை !

அளவிலா அன்பாய், ஆனந்தமாய், அமைதியாய் 
ஆழ்மனதில் அரும்பிக்கொண்டேதான் இருக்கிறாய் 
அன்னையே !

வியாழன், 1 டிசம்பர், 2016

பயமும் சுதந்திரமும்





குளிர் காற்றுக்கு பயந்து 
ஜன்னலை மூடச்சென்றேன் ...

ஏனோ,
பறந்துகொண்டிருந்த பட்டம் 
சிறு நெருடலை 
ஏற்படுத்தியது.

சனி, 10 செப்டம்பர், 2016

கரைந்த கண்ணோட்டம்


Image result for மண் சிலை விநாயகர்


நேற்று கடவுள் 
கரைந்ததால்
இன்று மண் ஆனது...

இன்று மண் ...
'நான்' கரைந்ததால்
 அதுவே கடவுளுமாய் ஆனது...



ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

இல்லற தாம்பத்யம்


Image result for family

நான் மகன் நீ ...
இன்று
நான் நீ மகன்  சரியா 
என்றேன்...
புரியலை என்றாள்
அன்றும்
இரவு கழிந்தது
நான் மகன் அவளென்று


சனி, 3 செப்டம்பர், 2016

திண்ணை




நினைவிலிருந்து நீங்கவேயில்லை  
அக்ரஹார திண்ணை...

ஆண்டு விடுமுறைக்கு வருகையில்
இந்த வருடமாவது 
திண்ணையை தாண்ட முடியுமா...
ஓடித் தாண்டாமல் 
நின்று தாண்ட முடியுமா என்ற 
அச்சத்தையும் ஆவலையும்
ரயிலிலிருந்து இறங்கி வீட்டுக்கு 
நடந்து செல்லும் பொழுதே 
கிளப்பிவிடும்...

கம்பம் பிடித்தல் விளையாட்டு..
விட்டுக்குடுத்தல் அறியாத வயதில்
திண்ணை கம்பத்தை 
வெற்றிக்காக வெறித்தனமாக ஓடி 
கெட்டியாக பிடித்துக்கொண்டதும்...
உயிர் குடுத்தாடும் ஆட்டத்தில் 
உயிரை குடுத்து ஓடிய ஓட்டமும்
திண்ணை அறியும்...

எதிர் பள்ளிக்கூடத்து சிறுவர்கள் 
இடைவேளையில் அசுத்தம் செய்யாமல் 
இருக்க கம்புடன் திண்ணையில் 
அமர்ந்து காவல் காத்ததும்...

ஆடு புலி ஆட்டமும், 
பகடைக்காயும், பல்லாங்குழியும், 
சோழியும் , சீட்டாட்டமுமென 
திண்ணை எப்பொழுதும் 
நிரம்பி இருக்கும்...

கலா கனகா உஷா 
அணு கீதா ஸ்ரீமதி 
விஜய் கணேஷ் 
வெறும் பெயர்கள் அல்ல
திண்ணையால் சேர்ந்த
 இளமைக்கால 
உன்னத நட்பின் அனுபவங்கள்...

தெருவே கூடி வேடிக்கைபார்க்கும்
தீபாவளி சங்கு சக்கரம் 
திண்ணையிலிருந்து விழாமல் 
தடுக்க ஆளுக்கு ஒரு 
பெரிய கைத்தடி...

தாத்தாவுடன் 
பல மாலை பொழுதுகளில் 
திண்ணையில் அமர்ந்து 
அவருக்கு வணக்கம் சொல்வோரை 
எண்ணிக்கொண்டிருப்போம்...

பாட்டி சொல்லிக்குடுத்த 
பாடத்திற்கு  ஊதியமாக  
திண்ணையை  சுத்தம் செய்துவிட்டு 
செல்லும் சிறுமிகள்...

மனைவி பையித்தியமானதிலிருந்து
எதிர் வீட்டு ரகுராமன் 
திண்ணையில் தான் 
இரவுகளை கழிப்பார்...

இப்படி  எல்லார் வாழ்க்கையிலும் 
வந்து சென்ற திண்ணை
ஏனோ 
தெருவில் ஒரு 
அழுக்கு மூட்டையுடன் அமர்ந்திருந்த
அம்மிணி பிச்சைக்காரிக்கு மட்டும் 
எட்டாமலே இருந்துவிட்டது.




வெள்ளி, 2 செப்டம்பர், 2016

நேரக்கணக்கு

Image result for clock


எப்பொழுதும் தாமதமாகவே 
கிளம்புகிறாள் மகள் என்று 
கடிகாரத்தை ஐந்து நிமிடம் வேகமாக வைத்தேன்.

மணி பார்க்கும் ஒவ்வொரு நேரமும்
ஐந்தை கழித்தே தாமதமாக செல்ல 
ஆரம்பித்தேன் நான்.