காலைத் தூக்கத்தை கலைத்தது
காதைக் கிழித்த பெரிய ஒலி ...
'உன் அறையில் புகுந்துவிட்டது
ஒரு பெருச்சாளியை ஒத்த எலி'
போர்வைக்குள் சுருண்டிருந்த நான்
சுருட்டிக் கொண்டு எழுவதற்குள்
மூலையில் வைத்திருந்த பெட்டியின் பின்
பதுங்கிவிட்டது அந்த எலி.
ஒரு கையில் விளக்குமாறு
ஒரு கையில் பிளாஸ்டிக் துடப்பம்
ஒரு கையில் தாத்தாத் தடி
ஒரு கையில் சுருட்டிய நாளிதழ்
நால்வர் கூடித் திட்டமிட்டனர்.
"நீ வாயிலில் நில்"
"நீ கூடத்தில்"
"நீ சமயலறைக் கதவருகில்"
"நான் பெட்டியை நசுக்குகிறேன்
முடிந்தால் அந்த பெட்டியையே எலிக்கு
சவப்பெட்டி ஆக்குகிறேன்..."
எச்சரிக்கை ஒலியெழுப்பி பெட்டி
சுவருடன் நசுக்கப்பட்டது...
நசுக்கவும் பெட்டியின் இடைவெளியில்
நாசுக்காக ஓடி விட்ட எலி, கூடத்தில்
கூடியிருந்த கூட்டத்தைக் கடந்து
தொலைக்காட்சிப் பெட்டியின் அடியிலே
பதுங்கியது...
கூடினர் அனைவரும்
தோல்வி அப்பிய முகத்துடன்.
புதிய திட்டம் தீட்டினர்
"விளக்குமாறோ, கைத்தடியோ
நிலத்தோடு பிடிக்கவேண்டும்..."
மறுமுறை எச்சரிக்கை ஒலியெழுப்பி
தாத்தாத் தடியினால் எலி வயிற்றில்
குத்தித்தள்ள.. தத்தளித்து
குதித்த எலி என் பக்கமாக ஒட...
விளக்குமாறு அதனை என் தந்தை
பக்கமாகத்தள்ள.. 'எகனாமிக்ஸ் டைம்ஸ்'
தாண்டி எலி ஒருபக்கம் ஒடி...
ஜன்னலுக்கு போர்திய துணிபிடித்து ஏறி
மறுபக்கம் இறங்கி ஜன்னலில் அமர
விழுந்தது துடப்பம்...எலி மேல் அல்ல..
என் மேல்... "அடி டா" என்று...
விழுந்தது என் கையில் இருந்த
விளக்குமாறு எலிமேல்...
மூன்றாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டேன்...
வெகு நேரம் அந்த எலி தென்படவேயில்லை..
கீழே விழுந்து செத்திருக்குமோ...அல்லது
உயிருடன் தான் துடித்துக்கொண்டிருக்குமோ ...
கேள்வி என்னுள் எழுந்தது...
உயிருக்கு அஞ்சி ஓடிய அந்த எலி
தன்னைக் காத்துக்கொள்ள ஓடியதா...
இல்லை தன் வயிற்றுக் குட்டிகள் காக்க ஓடியதா ??